பக்கங்கள்

செவ்வாய், 22 நவம்பர், 2005

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அலட்சியம் / அறிவீனம்

இன்று (22/11/2005) சென்னையில் நடைபெறவிருந்த இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவ மழைக்காலம்; இம்மாதங்களில் எந்த நாளிலும் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் தொடர்ந்து கடந்த மூன்று முறைகளாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் சென்னையில் கிரிக்கெட் ஆட்டங்களை நடத்த ஏற்பாடு செய்து, அது பின்னர் மழையால் ரத்து செய்யப்படுவது கேலிக்கூத்து. எத்தனையோ ஆட்டங்கள் சென்னயைத்தவிர இந்தியாவின் பிற நகரங்களில் மற்ற 10 மாதங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்றையேனும் சென்னையில் நடத்தாமல் மிகச் சரியாக இந்த இரு மாதங்களில் போட்டி நடத்த ஏற்பாடு செய்வது வாரியத்தின் அலட்சியமா அல்லது அறிவீனமா. (நல்ல பட்டிமன்ற தலைப்பு!!!)

சனி, 19 நவம்பர், 2005

இது என் முதல் தமிழ் வலைப் பதிவு

வணக்கம்! வாழிய நலம் சூழி!

தமிழில் வலைப்பூ ஆரம்பிக்கவேண்டும் என்ற என் நெடுநாளைய கனவு இப்போதுதான் நனவாகிறது. (வலைப்பூ / வலைப்பதிவு இரண்டில் எது சரி?) அதற்காக வீட்டில் ஒரு கணிணியும், இணையத் தொடர்பிற்கு ஒரு தொலைபேசி இணைப்பும் வாங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன. இப்போதுதான் நான் சோம்பேறித்தனம் என்னும் போர்வையை விலக்கி துயில் எழுந்துள்ளேன். இதுவரை நான் படித்த நாவல்களிலேயே எனக்குப் பிடித்த நாவலின் பெயரான 'ஒரு புளியமரத்தின் கதை'யையே என் வலைப்பதிவிற்கும் பெயராக வைத்துள்ளேன். அந்த நாவல் மட்டுமல்ல, அதை எழுதிய சுந்தர ராமசாமியையும் (சு.ரா) ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாது ஒரு சிந்தனாவாதியாகவும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது மரணம் என்னை மிகவும் பாதித்தது.

முதலில் இந்த வலைப்பதிவை ஆங்கிலத்தில் தான் ஆரம்பித்தேன். (இதைத் தமிழில் ஆரம்பிப்பதற்கு நண்பர் பகுத்தறிவாளர் உதவி புரிந்தார்) அதில் சு.ரா வின் மரணம் குறித்து (அ) அவருக்கு நடைபெறும் அஞ்சலிக் கூட்டங்கள் குறித்து அறிவித்த வலைப்பதிவுகளுக்கு இணைப்பு கொடுத்திருந்தேன். அவைகளை மீண்டும் இங்கு தருகிறேன்.

இந்த வலைப்பதிவில் எனக்கு அவ்வப்போது தோன்றுவதையும், படித்ததையும் பற்றி எழுதலாமெனயிருக்கிறேன். அவ்வப்போது எனக்குப்பிடித்த சு.ரா.வின் மேற்கோள்களையும் இடுவேன். இதை ஆரோக்கியமான ஒரு விவாதக் களமாக்கவும் ஆசையுண்டு. வாருங்கள் விவாதச் சமர் புரிவோம்.

பேரன்புடன்
தங்கவேல்

உயிர்மை: சுராவின் மறைவும் இருப்பும்

புதன், 16 நவம்பர், 2005