பக்கங்கள்

வெள்ளி, 27 அக்டோபர், 2006

பெரியோர் என வியத்தலும் இலமே...

"பெரியோர் என வியத்தலும் இலமே, சிறியோர் என இகழ்தலும் இலமே" - என்ன அருமையான வரிகள். இந்த வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் அண்மையில் எனக்கொரு சம்பவம் நடந்தது. என் துறை சார்ந்த ஒரு சிறிய கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நான் ஒழுங்கு செய்யவேண்டியிருந்தது. எம் துறை சார்ந்த பிற துறைகளில் வல்லுநர்களான சிலரை அதற்கு அழைத்திருந்தோம். 10 நாட்கள் இடைவெளியில் நடத்தவேண்டியிருந்ததால் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். மேலும், தொலைபேசி வழியாகவும் கூட்டம் நடைபெறுவதாகயிருந்த நேரத்தை இரண்டு நாட்கள் முன்பே அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால், கூட்டத்திற்கு இருவரைத்தவிர மற்ற அனைவரும் வந்திருந்தனர். வராத இருவரும் சென்னையில் தத்தமது துறைகளில் பெரும் புகழுடன் விளங்குபவர்கள். அவர்களிருவரின் மேல் எனக்கு பயம் கலந்த மரியாதையுண்டு.
ஏன் வரவில்லையென அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தான் வரமுடியாது என்பதைத் தன்னுடய காரியதரிசி மூலம் எனக்குத் தெரியப்படுத்திவிட்டதாக ஒருவர் கதையளந்தார்; மற்றொருவரோ தன்னுடைய காரியதரிசி கூட்டம் நடைபெறுவதாகயிருந்த நேரத்தைத் தனக்குத் தெரியப்படுத்தவில்லை எனவும், நாங்கள் அனுப்பிய கடிதம் அவருக்கு மிகத் தாமதமாகத்தான் கிடைத்தது எனவும் கூறினார். அவரது காரியதரிசியிடம் கேட்டபோது, இது உண்மையில்லை எனத் தெரியவந்தது. இவ்விருவர் வராததற்கும் வேறு உண்மையான காரணம் இருந்திருக்கலாம்; ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் அவ்வாறு பூசி மழுப்பியது எனக்கு மிகுந்த வருத்தத்தையளித்தது. இதில் இவர்களுக்கு தத்தமது துறைகளில் அறநெறியில் ஒழுகுபவர்கள் என்ற நற்பெயர்வேறு உண்டு. இந்நிகழ்ச்சி எனக்கு கணியன் பூங்குன்றனாரின் மேற்சொன்ன கவிதை வரிகளை ஞாபகப்படுத்திற்று.