பக்கங்கள்

செவ்வாய், 6 பிப்ரவரி, 2007

அலட்சியம் + பொறுப்பின்மை + அராஜகம் = இருசக்கர வாகன ஓட்டிகள்

சென்னையில் (இந்தியா முழுதும் பரவலாக) தற்போது இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட பன் மடங்கு அதிகமாகிவிட்டது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதும்?!, உற்பத்தியாளர்களுக்கிடையிலான கடுமையான போட்டியும் அவர்கள் விளம்பரப்படுத்துவதில் காட்டும் தீவிரமும், வங்கிகள் கொடுக்கும் கடனும், இரு சக்கர வாகனங்களின் அதீதப் பெருக்கத்திற்குக் காரணங்களாகச் சுட்டப்படுகின்றன.

அதனால் மற்றொரு அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னையை எடுத்துக் கொண்டால் இவ்விரு சக்கர வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற தன்மையும், அலட்சியமும், அராஜகமும் மிகவும் அதிகமாகிக் கொண்டேவருகின்றன. சாலையில் வண்டியை ஓட்டும்போது மட்டுமல்ல, பார்க்கிங் பண்ணும்போதும் அவர்கள் மிகவும் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும்தானா பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது.

என் புரிதலில் அவர்களே, ஆட்டோ, பேருந்து ஓட்டுனர்களைவிடவும், பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள். தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் செல்லாதது, ஒரு வழிப்பாதையிலும் (ஓரமாக) செல்வது, ஒலிப்பானை தேவையில்லாமல் பயன்படுத்துவது, சிக்னல் விழுந்தபின்பும் கடப்பது, நிறுத்துக்கோட்டைத் தாண்டி நிறுத்துவது, சாலையின் வலது பக்கமாக வண்டியை ஓட்டிக்கொண்டு செல்வது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அதுபோன்றே கண்ட இடங்களிலும் பார்க்கிங் செய்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் சகஜம். சிலர் கிட்டத்தட்ட சாலையின் நடுவிலேயே பார்க் செய்து நிறுத்துவர். நமக்கு முன்னால் நிறைய வண்டி இருக்கிறதே நாம் இப்படி நிறுத்தினால் பிறர் எப்படி வண்டியை எடுப்பார்கள் என்ற ஓர்மை இல்லாமலேயே தன் வண்டியை அடைத்துக்கொண்டு நிறுத்துவதும் பரவலாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை பக்கவாட்டு ஸ்டாண்டு போடுவது அலட்சியம், சோம்பேறித்தனத்தின் மொத்தக் குறியீடு என்பேன். சில நேரங்களில் பக்கவாட்டு ஸ்டாண்டு ஏன் தான் வைக்கிறார்களோ என்று தோன்றுவதும் உண்டு.

நானும் சிலமுறை இவற்றில் சிலவற்றை இடையூறு என்று அறியாமலும் (சில சமயங்களில் அறிந்தும் - கும்பல் சைக்காலஜி) செய்திருக்கிறேன். பிரச்சனை என்னவென்றால், ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமென நடந்தால் பரவாயில்லை. இப்பிரச்சனைகள் ஒரு விதிவிலக்காக அன்றி விதியாகவே மாறிவரும் சூழல் ஏற்பட்டுவிட்டதோ என்ற அவலத்தை இருசக்கர வாகன ஓட்டிகள் ஏற்படுத்துகின்றர் (ஏற்படுத்துகின்றோம்). ஆகவே மகா ஜனங்களே, (இதைப் படிக்கும் பெரும்பாலோர் இருசக்கர வாகனம் வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையிலும், கும்பல் சைக்காலஜியில் மாட்டிக்கொண்டிருப்பீர்கள் என்ற எண்ணத்திலும்,) இளைஞர்களாகிய நாம் சற்று பொறுப்புடன் நடந்துகொள்வோமாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக