பக்கங்கள்

வெள்ளி, 23 மார்ச், 2007

அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு சந்திப்பு

இந்தமுறை எங்களூருக்குச் செல்லும்போது பதிவர் அரவிந்தன் நீலகண்டனைச் சந்திக்கவேண்டும் என்று முன்பே தீர்மானித்துக் கொண்டேன். அவருடைய பதிவொன்றில் ஏற்கனவே என் விருப்பத்தைப் பின்னூட்டி, அவரும் அதற்குச் சரியென்றிருந்தார். எனவே கடந்த ஞாயிறு ஊருக்குச் சென்றிருந்தபோது, அவரைத் தொடர்புகொண்டு, நான் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களில் ஏதாவதொரு நாளில் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும், அவருக்கு வசதியான நேரத்தைச் சொன்னால் நாகர்கோவில் வந்து அவரைச் சந்திக்க ஆவலாயிருப்பதாகவும் சொன்னேன். அவர் திங்கள் மாலை 4.30 மணிக்குமேல் சந்திக்கலாம் எனக்கூறினார். எனக்கும் அதில் மிக்க சந்தோஷம். ஏனெனில், நான் விரும்பியதும் திங்கள் மாலையைத்தான். செவ்வாய் மாலை சென்னை செல்ல கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலைப் பிடிக்கவேண்டியதிருந்ததாலும், கிட்டத்தட்ட அய்ந்து மாதங்கள் பூட்டியிருந்த வீட்டைச் சுத்தம் செய்யவே ஒருநாள் ஆகும் என்பதால் ஞாயிற்றுக் கிழமையையும் தவிர்க்க விரும்பினேன். (என் பெற்றோரும், தங்கையும் சென்னையிலுள்ள என் வீட்டிற்கு வந்து ஐந்து மாதங்களாகிவிட்டன.)

தக்கலையிலிருக்கும் என் நண்பனுக்கு பிறந்திருக்கும் இரண்டாவது குழந்தையையும் பார்க்கவேண்டிய அவசியம் எனக்கிருந்ததால், திங்களன்று மதியம் 12 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறினேன். எங்களூரான பணகுடியிலிருந்து நாகர்கோவில் 25 கி.மீ. (ஏகதேசமாக சென்னை செண்ட்ரலிருந்து தாம்பரம் தூரம்), அங்கிருந்து தக்கலை சுமார் 17 கி.மீ. தூரம்.

பணகுடியில் சென்னையைவிட வெயில் சுட்டெரித்தது. வழக்கமாக பங்குனி மாதத்திலும், சித்திரையின் முன்பாதியிலும் பணகுடியில் அவ்வளவாகக் காற்று வீசாது. மற்ற 10 மாதங்களில், பெரும்பாலும் தென்மேற்கிலிருந்து, பெரும்பாலான தமிழக ஊர்களைப் போன்றே எங்களூருக்கு மேற்குத் திசையிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து, வீசும் தூய காற்றை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 'கடன் வாங்கிக் காத்தடிக்கும் கந்தன் பணகுடி' என ஒரு பழமொழியே எங்களூருக்கு உண்டு. எங்கள் ஊரைப் போன்றே காற்று வீசும் தமிழகத்தின் வேறு சில ஊர்கள்; கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முப்பந்தல், திருநெல்வேலி மாவட்டத்திலேயே உள்ள கயத்தாறு, கோவையிலுள்ள பல்லடம் மற்றும் ஈரோட்டிலுள்ள தாராபுரம். இந்த ஊர்களில் மட்டும் இவ்வாறு காற்று வீசுவதற்குக் காரணம் இப்பகுதிகளிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் (கணவாய்கள்) அமைப்பே என நினைக்கிறேன். அதனால்தான் இவ்வூர்களில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு மிண்சாரம் தயாரிக்கப்படுகிறது.

எங்களூரில் நான் விரும்பும் மற்றொரு விசயம்; அங்கு வீடுகளில் சென்னையைப்போல் கருந்தூசிகள் படர்வது அரிது. சென்னையின் வாகனப் புகைகளினால் ஏற்படும் SPM (Suspended Particulate Matter) எனப்படும் கார்பன் மோனாக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்கள் அங்கு பெருமளவில் இல்லை. இதுபோதாதென்று, சென்னையில் நான் வசிக்கும் பகுதியின் அருகில் கொடுங்கையூர் குப்பை எரிக்கும் நிலையமுள்ளதால், வீட்டிற்குள் நடக்கும்போதே பாதங்கள் கரிபோன்று கருப்பாகிவிடும். இதெல்லாம் சென்னையைக் காதலிப்பதற்காக நான் கொடுகும் விலை. சரி, எங்களூர்ப் புராணம் போதும், விசயத்திற்கு வருகிறேன்.

மதியம் 1.30 மணிக்கு தக்கலை போய்ச் சேர்ந்த நான், அங்கு என்னுடன் கல்லூரியில் படித்த மற்ற இரு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு உணவகத்தில் உணவருந்திவிட்டு, அதில் ஒரு நண்பனுடைய குழந்தையைப் பார்க்க தக்கலையருகிலுள்ள முத்தலக் குறிச்சியிலுள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன். தக்கலையில் இயற்கையாகவே பணகுடியைவிட பசுமை அதிகமாதலால், வெயில் அவ்வளவாகத் தெரியவில்லை. இதற்கிடையில் அரவிந்தன் அவர்களிடமிருந்து என் கைத்தொலைபேசியில் அழைப்பு - மாலை 4.30 மணிக்கு நான் நாகர்கோவில் வந்துவிடுவேனா என்பதை உறுதிசெய்ய. நான் பின்னர் என் நண்பன் வீட்டில் விடைபெற்றுக் கொண்டு, பேருந்து பிடித்து நாகர்கோவில் கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தை அடையும்போது மாலை 4.40 ஆகியிருந்தது. நாகர்கோவிலிருந்து தக்கலைக்கும், பின்னர் அங்கிருந்து நாகர்கோவிலுக்கும் கேரள அரசுப் பேருந்துகளில் பயணித்தேன். அந்த இரு பேருந்துகளிலும் நடத்துனர் டிக்கட் கொடுக்கும் முறை என்னைக் கவர்ந்தது. கிரெடிட் கார்டு ஸ்வைப் பண்ணும் கருவி போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு டிக்கெட்டை பிரிண்டவுட் எடுத்துக்கொடுக்கிறார்கள். இந்தமுறை நம்மூர் முறையைவிட எளிதாகவும், வேகமாகவும் தெரிகிறது. என் தந்தை சென்னையிலும் சில நிலைய நடத்துனர்கள் இம்முறையில் டிக்கெட் கொடுப்பதாகக் கூறினார்.

அரவிந்தனைக் கைத்தொலைபேசியில் அழைத்து பேருந்து நிலையத்திற்கு எதிரிலுள்ள ஒரு வணிகவளாகத்தின் வாசலில் நான் நின்றுகொண்டிருப்பதாகவும் மேலும் அவர் என்னை அடையாளம் கண்டுகொள்ள நான் அன்றணிந்திருந்த உடைகளின் நிறத்தையும் சொன்னேன்; அதே சமயம் அவர் அணிந்துவரும் உடையின் நிறத்தையும் கேட்டுக்கொண்டேன். 10 நிமிடங்களில் அங்கு வந்துவிடுவதாக அவர் சொன்னார். இதற்கிடையில் அவர் எப்படியிருப்பாரோ என்று மனம் நினைக்கத் தொடங்கியது. சிலரது எழுத்துக்கள் சார்ந்து நாம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் அவர்களைப் பற்றிய பிம்பம் நேரில் பார்க்கும்போது ஏமாற்றமளிக்கும். அவ்வேமாற்றத்தைத் தவிர்க்கவே முயன்றேன். ஆயினும், அவர் அணிந்து வருவதாகச் சொன்ன சிவப்பு நிற டி-சர்ட் கலரில் டி-சர்ட் அணிந்த இருவரைப் பார்த்து இவராக இருக்குமோ என மனம் நினைத்தது. திண்ணையில் அவர் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே அவர் எழுத்துக்களில் சிலவற்றைப் படித்து வந்திருந்தாலும், அவரது கருத்தியல் எனக்கு பெரும்பாலும் உவப்பானதாக இல்லை. ஆனால் அவரது சிந்தனைகளிலுள்ள அறிவியல் தேட்டம், அதில் விமரிசனங்கள் உண்டெனினும், எனக்கு உவப்பானது. அதுவே என்னை அவரைச் சந்திக்க தூண்டுகோலாய் இருந்திருக்கலாம். ஆனால், அவரிடம் என்ன பேசுவது என்பதை நான் முன் தீர்மானித்துக் கொள்ளவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்; ஒன்று கேள்விகளை முன்தீர்மானித்துக் கொண்டால் பதட்டத்தில் நான் சற்று சொதப்பிவிடுவேன் என்பது. மற்றொன்று இதுதான் எனக்கும் அவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு என்பதால், அவர் கருத்திற்கு பெரும்பாலும் எதிர்க் கருத்துடைய, நான் கேட்கும் கேள்விகள் இருவருக்குமே சற்று அசெளகரியமாக இருக்கும் என்பதாலும், இயல்பாக அவ்வப்போது தோன்றுவதை வைத்து உரையாடிக் கொள்ளலாம் என முடிவுசெய்து கொண்டேன்.

அவர் சொன்னபடியே 10 நிமிடங்களில் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்துவிட்டார். அவரது தோற்றம் சார்ந்து எந்தவிதக் கற்பனையும் அந்த நிமிடம் வரை நான் கொண்டிருக்கவில்லையாதலால், அவரது தோற்றம் எனக்கு ஏமாற்றமளிக்கவில்லை. பெரும்பாலான என் தமிழ் வலைப்பதிவு நண்பர்களைப் போன்று 30 தைத் தாண்டிய இளைஞர் தான். பரஸ்பர அறிமுகக் கைகுலுக்கலுக்குப் பின்னர் அருகிலுள்ள கடையில், என் விருப்பத்திற்கிணங்கி, சர்பத் குடித்துக்கொண்டோம். வீட்டிற்குச் சென்றே பேசலாம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அமைதியான சூழலில் அமைந்த நடுத்தரவர்க்க வீடு அவருடையது. வீட்டிலிருந்த அவரது அப்பாவையும், மகனையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். நாங்கள் சென்ற நேரம் பேரனுக்குத் தாத்தா வழக்கமாகக் கதை சொல்லும் நேரமாம். தற்செயலாக, அன்றைக்கு அரவிந்தனின் அப்பா தனது பேரனுக்குச் சொல்லிக்கொண்டிருந்த கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் வேலு என்பதாகும். அதைக்கேட்டவுடன் நாங்கள் சிரித்துக் கொண்டோம். பின்னர் தாத்தா-பேரனின் கதையார்வத்தைக் குலைக்கவிரும்பாது, நாங்களிருவரும் முதல்மாடிக்குச் சென்றோம்.

அரவிந்தன் தனது வீட்டிலுள்ள நூலகத்தை எனக்குக் காட்டினார். 1960 களிலிருந்து அவரது தந்தையும் பின்னர் அவரும் சேர்த்து வைத்திருக்கும் நூற்களும், முக்கியமான நாளிதழ் செய்திகளின் வெட்டித் தொகுத்து பைண்டிங் செய்யப்பட்ட அடுக்குகளும் அங்கிருந்தன. இதுதான் உங்களது ரிசோர்ஸா (Resource) என , எனக்கே உரித்தான, எள்ளலுடன் அவரிடம் கேட்டேன். பணகுடி அரசு நூலகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, நான் பார்த்த எண்ணிக்கையிலான புத்தகங்கள் அவரிடமிருந்தன. எல்லாவற்றையும் நீங்கள் படித்துவிட்டீர்களா என அடுத்த கேள்வி கேட்டேன். பின் இவ்விசயத்தில் எனது நிலையையும் நான் கூறினேன். பின்னர் சற்று அமர்ந்து பேசலானோம். இருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சிறிது நேரம் பேசிய பின்பு, இயல்பாகப் பேச்சு தீவிரமான விசயங்கள் குறித்துத் திரும்பியது.

நான் அவரது 'கடவுளும் 40 ஹெர்ட்சும்' புத்தகம் பற்றி பேசலானேன். அதிலுள்ள ராமர் பாலம் பற்றிய கட்டுரையின் கோணம் எனக்கு மகிழ்ச்சியளித்ததாகவும், கடவுளும் 40 ஹெர்ட்ஸும் என்ற கட்டுரையின் கருத்துக்கள் நான் இதுவரை கேள்விப்படாததாக உள்ளதால் தற்போதைக்கு என்னால் அதுபற்றி விமரிக்கமுடியாது என்று கூறியதாகவும் ஞாபகம். அதற்குள் அவரது மனைவியிடமிருந்து அவருக்குக் கைத்தொலைபேசியில் அழைப்பு வரவே 10 நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லி எனக்கு சில புத்தகங்கள் கொடுத்து படித்துக்கொண்டிருக்குமாறு சொன்னார். ஆனால், தண்ணீர் அருந்துவதற்காக கீழே சென்ற நான் அவருடைய தந்தையிடம் அமர்ந்து பேசலானேன். அவர் எனக்கு தெற்குச் சீமையின் பிரபலமான கைமுறுக்கும், நேந்திரம் பழ சிப்ஸும் பரிமாறினார். அரவிந்தனின் தந்தை ஓய்வுபெற்ற கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர். மேலும் அரவிந்தனது அம்மாவையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்; அவரும் ஒரு ஓய்வுபெற்ற கல்லூரி கல்லூரிப் பேராசிரியர் என்று எனக்கு அறிமுகப்படுத்தியதாக ஞாபகம்.

அரவிந்தனோடு பேச ஆரம்பித்தது போலல்லாமல், அவரது தந்தயினுடனான எனது உரையாடல், அச்சூழல் எனக்கு விரைவாகப் பரிச்சியம் ஆகிக்கொண்டிருந்தபடியால், எடுத்தவுடனே ஜெட் வேகத்தில் பறந்தது. எனது ஆதர்சங்களில் ஒருவராக நான் இதுவரையில் கருதிக்கொண்டிருக்கும் சுந்தர ராமசாமி குறித்து பேச்சு வந்தது. அவரது தந்தையும், சு. ரா வுடனான தனது நட்பையும், சு.ரா தன் வீட்டிற்கு வந்து அளவளாவிய நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்தார். ஆனால், சு. ரா மேல் தனக்கு கடுமையான விமரிசனங்கள் உண்டு என்றாலும், பிற்காலத்திய சு.ரா பலமுனைகளில் மேலும் சறுக்கிவிட்டார் என்று சில உதாரணங்கள் மூலம் விளக்கினார். அவற்றில் பல, ஏற்கனவே சு. ரா மீது பலரும் முன்வைத்த விமரிசனங்கள்தான். ஆயினும், சு. ரா கன்னியாகுமரி மாவட்டம் தந்த மூன்று முக்கியமான சிந்தனாவாதிகளிலொருவர் என்று தான் கருதுவதாகக் கூறினார். அவ்ரது எழுத்துகளில் தனக்குப்பிடித்தவையாக ஒரு புளியமரத்தின் கதை நாவலும், சிறுகதைகளில் சீதை மார்க் சீயக்காய்த்தூளும் என்றார். எனக்கும் இவையிரண்டும் மிகவும் பிடித்தமானவை. மேற்கொண்டு அரவிந்தனுக்கு தன்னைவிட சு. ரா வுடன் முரண்பாடுகள் அதிகம் என்றும் கூறினார். ஆயினும் அவர்களிருவரும் பலமணிநேரங்கள் விவாதிப்பதுண்டு என்றும், ஒருமுறை சு. ரா, அரவிந்தன் குறித்து வேறுயாரும் தன்னிடம் புகழாத அளவிற்கு புகழ்ந்து கூறியதாகவும் சொன்னார். இத்தகைய பண்புகள் சு. ராவிடம் எப்போதும் உண்டு என்றும் கூறினார். இவ்வாறு நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அரவிந்தன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தார். அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த பின்னர், அரவிந்தன் சு.ரா குறித்த தனது விமரிசனங்களையும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அவர் எழுத்திற்கும் இருந்த முரண்பாடுகள் சார்ந்து, முன்வைத்தார்.

பின்னர் பேச்சு கம்யூனிசம் குறித்தும், பெரியார் குறித்தும் திரும்பியது. கம்யூனிசம் மற்றும் பெரியாரிசம் குறித்து அரவிந்தனது தந்தை தனது விமரிசனங்களைக் கூறினார். அவரது விளக்கப்படி, நாராயண குரு, அய்யா வைகுண்டர், அய்யன் காளி போன்றோர் சிறந்த சமூகச் சீர்திருத்தவாதிகள், குறிப்பாக பெரியாரைவிட, என்றும் கூறினார். இந்த உரையாடலில் அரவிந்தன் அவ்வப்போது தனது கருத்துக்களைச் சொன்னது தவிர, பெரும்பாலும் மெளன சாட்சியாகவே இருந்தார். எங்களது உரையாடல் பெரும்பாலும் சு.ரா, கம்யூனிசம், பெரியார் போன்றவற்றைச் சுற்றியே இருந்தாலும், அவைகளின் ஊடாக மகாத்மா காந்தி, அப்சல், ஜெயமோகன், ஜெயகாந்தன், அண்ணா, கருணாநிதி, சாய்பாபா, தேசியம், விவேகானந்தர், காஞ்சிப் பெரியவர் என்றழைக்கப்பட்ட சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்று பல ஆளுமைகள், கருத்தியல்கள் குறித்துமான விமரிசனங்கள், மதிப்பீடுகள் சார்ந்தும் இருந்தது. மூவருக்கும் இவைகள் குறித்து தனித்துவமான சிந்தனைகள், கருத்துக்கள் இருந்தபோதிலும், யாரும் யாரையும் குறை கூறிக்கொள்ளவில்லை. சிற்சில சமயங்களில் அவரது தந்தையின் கருத்துக்கள் அவ்வாறான தொனியிலிருந்தாலும், எங்களைவிடவும் வயதிலும், அனுபவத்திலும் உயர்ந்தவர் என்ற வகையிலே நாங்கள், குறிப்பாக நான், ஆட்சேபிக்கவில்லை. நான் அவதானித்த வகையில், அரவிந்தனுக்கும் அவரது தந்தைக்கும் இடையில் பெருமளவில் கருத்தொற்றுமை இருந்தாலும், அவர்களிருவரும் வேறுபடும் புள்ளிகளுமிருந்தன. என்னைக் கவர்ந்த விசயம், அவரது தந்தை ஏதேனும் ஒருபொருள் குறித்துப் பேசும்போது, அதுகுறித்து அரவிந்தனுக்கு மாற்றுக்கருத்து உண்டெனவும், அதைச் சொல்லுமாறும் அரவிந்தனைக் கேட்டுக்கொள்வார். ஒரு தந்தை- மகனிடையே காணப்பட்ட இத்தகைய உறவு எனக்கு மிகுந்த ஆரோக்கியமாகப்பட்டது.

இதற்குள் இரவு 8.30 ஆகிவிட்டபடியால் நான் ஊருக்குக் கிளம்பத் தயாரானேன். அரவிந்தனின் தந்தை எங்களிருவருக்குமிடையிலான உரையாடலை தான் கெடுத்துவிட்டதாக வருத்தப்பட்டுக்கொண்டார் மேலும் விவேகானந்தர் பற்றி நன்கு படிக்குமாறு சொன்னார். புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என நான் கேட்டபோது வேண்டாமே என அரவிந்தன் கேட்டுக்கொண்டதால், அதன் அர்த்தம் புரிந்துகொண்ட, நான் விட்டுவிட்டேன். ஆனால் நம் சந்திப்பு குறித்து பதிவு எழுதலாம் அல்லவா எனக் கேட்டுக்கொண்டேன். சிரித்துக்கொண்டே அதற்கு அரவிந்தன் உடன்பட்டார். அதன்பின்னர் அவர்கள் குடும்பத்தினரிடம் நான் விடைபெற்றுக்கொண்டேன். நான் வேண்டாமென்று சொல்லியும் கேட்க்காமல் அரவிந்தன் என்னை பேருந்து நிலையத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி என்னை அவரது டூ-வீலரில் அமர்த்திக்கொண்டார். எங்கள் உரையாடல் மேலும் தொடர்ந்தது.

அதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட சிற்றுண்டி அருந்திவிட்டு ஊருக்குச் செல்லலாமே என்ற அவர் வேண்டுகோளுக்கிணங்கி அருகிலுள்ள ஒரு அழகான உணவகத்திற்குள் சென்று உரையாடலைத் தொடர்ந்தோம். சென்னையிலுள்ள, அவர் கருத்திற்கு மாற்றுக்கருத்துக்கள் கொண்ட, என் நண்பர்கள் குறித்து அவர் மேலதிக விபரங்கள் கேட்டறிந்தார். அவர் சென்னைக்கு வரும்போது எல்லோரையும் பார்க்கலாம் என நான் அவரை அழைத்தேன். ஒருவருக்கொருவர் நேரடிப் பரிச்சியம் ஏற்படும்போது அது பதிவுலக சூழலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி, இவ்விசயத்தில் என் சொந்த அனுபவத்தையும் கூறினேன். அவர் எழுத்துக்கள் பற்றிய என் அபிப்பிராயத்தைக் கேட்டார். அவர் கருத்தியலில் கிஞ்சித்தும் உடன்பாடில்லை என்று நான் அவர் கட்டுரை ஒன்றில் பின்னூட்டமிட்டிருந்த போதிலும், முகத்திற்கு நேராக சிலவற்றை சொல்ல தயக்கம் எனக்கு உண்டாதலால், அவரது சமீபகால கட்டுரை ஒன்றில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை எனக்கூறினேன். மற்றபடி சில விசயங்களில் அவரது அறிவியல் சார்ந்த கோணங்களில் எனக்கு உடன்பாடுண்டு என்று தெளிவுறுத்தினேன். நான் ஒன்றும் அவரைப் போல் (மேலும் பலரைப்போல்) பெரிதும் எழுதிக் கிழிக்கவில்லையாதலால் என் எழுத்துக்கள் பற்றிய அவரது கருத்துக்களைக் கேட்டறியத் தோன்றவில்லையோ என இப்போது உணர்கிறேன்.

மேற்கொண்டு இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது பள்ளியில் அவருடன் படித்த நண்பரொருவர் எனக்குப் பாளையங்கோட்டைச் சித்தமருத்துவக் கல்லூரியில் 2 வருடங்கள் மூத்தவர், மேலும் எனக்கும் அவர் நண்பர் என்பதும் தெரியவந்தது. அரவிந்தனுடன் தற்போது வேலை செய்யும் நண்பரொருவர் மேற்சொன்ன அதே கல்லூரியில் எனக்கு நண்பராகவும், மேற்சொன்ன நண்பரைப்போலவே எனக்கு 2 ஆண்டுகள் மூத்தவர் என்பதும் இருவருக்கும் ஏற்கனவே தெரியும். (எங்களிருவருக்கும் தோழர்களான அவர்களிருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்) இதனால் எங்களிருவருக்குமிடையில் மேலும் ஒரு உறவுப்பாலம் (நட்புப்பாலம்!) அமைந்துவிட்டது.

அதற்குள் மணி இரவு 10 ஆகிவிட்டபடியால் நான் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு எங்களூர் வழியாக மதுரை செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். பயணம் செய்யும்போது, நிகழ்ந்த சந்திப்பு குறித்து எவ்வாறு எழுதலாம் என அசை போட்டுக்கொண்டே வந்தேன். ஒற்றைவரியில் சொல்வதானால், பரஸ்பர மரியாதையும், புரிந்துணர்வும் மிகுந்த சந்திப்பு; சற்றேறக்குறைய 5 மணி நேரங்கள் மிகுந்த திருப்தியளித்த ஒரு உரையாடல். இந்தமுறை, நீண்ட நாட்கள் கழித்து, எனது பணகுடிப் பயணம் மிகுந்த நிறைவையளித்ததாக உணர்ந்தேன். 10.30 மணிக்கு என் வீட்டிற்குச் சென்றபோது, என் தந்தை இப்போதான் உனக்கு மணி 9 ஆகிறதா?! என வினவினார். என்னை 9 மணிக்குள் வந்துவிடுமாறு அவர் சொல்லியனுப்பியதால் அவ்வாறு கேட்டார். 9 மணி என்று சொன்னால்தான் 11 மணிக்குள்ளாக நான் வருவேன் என்பது அவருக்குத் தெரியும். பின்ன, 35 வருடங்களாக என்னைப் பார்த்துவருபராயிற்றே.

10 கருத்துகள்:

  1. அது ஒரு நல்ல இனிமையான மாலைப்பொழுதாக அமைந்தது தங்கவேல். அதற்கு உங்களுக்குதான் நான் நன்றி சொல்லவேணும். அடுத்த முறை வரும் போது ஒரு முழு நாளை நாம் சந்திப்பில் கழிக்க ஏதுவாகும்படிக்கு திட்டமிடலாம் அது நாகர்கோவிலாக இருந்தாலும் சென்னையாக இருந்தாலும்.

    பதிலளிநீக்கு
  2. தங்கவேல்,
    சுவாரஸ்யமாக இருந்தது. அடுத்த முறை ஊருக்கு செல்லும் போது அரவிந்தன் நீலகண்டனை சந்திக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி அரவிந்தன், ஜோ. ஜோ, நான் உங்களையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  4. தங்கவேல், எந்த முன்முடிபுகளும் இன்றி நீங்கள் அரவிந்தனைச் சென்று சந்தித்ததும், அது பற்றி எழுதியதும் யதார்த்தமாகவும், சிறப்பாகவும் இருந்தது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜடாயு.

    பதிலளிநீக்கு
  6. //நன்றி அரவிந்தன், ஜோ. ஜோ, நான் உங்களையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்.///

    இதன்மூலம் உங்கள் மீது விழுந்துவிட்ட இந்துத்துவ சாணியை கழுவ நினைக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  7. அரவிந்தனின் தந்தை ஓய்வுபெற்ற கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்.///

    தமிழ்ப்பேராசிரியரின் மகனாய் இருந்துகொண்டு திராவிடத்தமிழர்களைத் தாக்குவது ஏன்?

    அப்புறம் அரவிந்தன் நீலகண்டன் பார்ப்பனரா என்ற முக்கியமான விஷயத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே. ஒருவேளை உங்க சாதியோ?

    பதிலளிநீக்கு
  8. அரவிந்தன் நீலகண்டன் என்ற மனிதர் நகமும் சதையுமான உண்மை மனிதர் என்று எல்லோருக்கும் சொல்லி விட்டீர்கள் - நன்றி, தங்கவேல்.

    சரி, யார் போய் இயேசுவை சந்தித்து விட்டு வந்து, அர்விந்திற்குச் சொல்வது - இயேசுவும் நகமும் சதையுமான உயிர்ப்புள்ள ஒரு மனிதராக, இறைதூதராக வாழ்ந்து மறைந்த மனிதர் என்று?

    (Arvind, take it easy...)

    அன்புடன்
    நண்பன்

    பதிலளிநீக்கு
  9. //இதன்மூலம் உங்கள் மீது விழுந்துவிட்ட இந்துத்துவ சாணியை கழுவ நினைக்கிறீர்களா?//

    தவறான புரிதல் அனானி.

    //தமிழ்ப்பேராசிரியரின் மகனாய் இருந்துகொண்டு திராவிடத்தமிழர்களைத் தாக்குவது ஏன்?

    அப்புறம் அரவிந்தன் நீலகண்டன் பார்ப்பனரா என்ற முக்கியமான விஷயத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே. ஒருவேளை உங்க சாதியோ? //

    முதலில் உங்க சிந்தனையை சீர்படுத்திக்கொள்ளுங்கள் அனானி No 2.

    //அரவிந்தன் நீலகண்டன் என்ற மனிதர் நகமும் சதையுமான உண்மை மனிதர் என்று எல்லோருக்கும் சொல்லி விட்டீர்கள் - //

    நன்றி நண்பன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  10. திரு.அரவிந்தனின் தந்தையார் மதிப்பிற்குறிய நீலகண்டப் பிள்ளை அவர்கள் குமரி கண்டெடுத்த சிந்தனாவாதி மட்டுமல்ல;தமிழறிஞரும் ஆவார். "முருகப்பெருமான் - குறிஞ்சித் தலைவன் முதல் தமிழ்க்கடவுள் வரை" என்ற அன்னாரின் சொற்பொழிவு குறிப்பிடத்தக்கது. (ஏழெட்டு வருடங்களுக்கு முன் ஆற்றிய ஆய்வுரை. அதன் அதன் ஒலியாக்கம் எங்கேனும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.)

    பணி ஓய்வுக்குப் பிறகு, தான் பணியாற்றிய நாகர்கோவில் இந்துக் கல்லூரியிலேயே அரவிந்தன் அவர்களுக்கும் உத்யோகம் கிடைத்திருப்பதாகச் சொன்னார்கள்.

    அரவிந்தன் அவர்களும் தந்தையார் பாணியில் இந்து விழுமியங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் வைக்கும் பாங்கு வியக்க வைக்கிறது.

    பேராசிரியர் நீலகண்டன் அவர்களின் தொலைபேசி கிடைக்குமா?

    மு.சொக்கநாதன்
    ஓய்வு பெற்ற தமிழாசிரியர்
    வல்லம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
    வல்லம்

    sokkanaathan@gmail.com

    பதிலளிநீக்கு