பக்கங்கள்

ஞாயிறு, 7 அக்டோபர், 2007

அறிஞர் சோதிப்பிரகாசம்

நேற்று திண்ணையில் ஜெயமோகன் எழுதிய அறிஞர் சோதிப்பிரகாசம் குறித்த அஞ்சலிக் கட்டுரையை கண்டதும் திடுக்கிட்டேன். ஒரு கணம் மீண்டும் தலைப்பை வாசித்து அது அஞ்சலிக் குறிப்புதான் என்பது உறுதியானவுடன் மிகுந்த கவலையுற்றேன். அவர் திண்ணையில் தொடர்ச்சியாக எழுதிவந்த கார்ல் பாப்பரின் வெங்காயம் குறித்து அவருடன் விவாதிக்கவேண்டுமென நினைத்திருந்தேன்.

முன்பொருமுறை, (3-4 வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன்) சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் தற்செயலாக அவருடன் நேரிடையான அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அதற்குமுன்பு, அவர், ஜெயமோகனின் ஆறு தரிசனங்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை ஒன்றைப் படித்திருக்கிறேன். அதை எழுதியவர் இவரா என்று அவரைப் பார்த்தமாத்திரத்தில் ஆச்சிரியப்பட்டுப் போனேன். நான் உருவகம் செய்து வைத்திருந்த தோற்றத்திற்கு நேரெதிரான எளிமையான தோற்றம், பேச்சும் அவ்வாறே. அப்போது பார்த்தபோது நல்ல உடல்நிலையிலேயே அவர் காண்ப்பட்டார். அதனால் அவர் கார்ல் பாப்பர் குறித்து எழுதியதை நன்றாக வாசித்துவிட்டு பின்னர் அவரைச் சந்தித்து உரையாடலாம் எனக் காலத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தேன். ஜெயமோகனின் அஞ்சலிக் கட்டுரையைப் படித்ததும் அவரைச் சந்தித்து உரையாடமல் காலந்தாழ்த்திவிட்டேனே என்ற வருத்தம் மேலிடுகிறது. மேலும், அவர் எனது ஊருக்கு அண்மைய ஊரான காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் என்ற, அவ்வஞ்சலிக் கட்டுரை மூலம் அறியப்பெற்ற, கூடுதல் தகவலும் வருத்தத்தை மேலும் அதிகமாக்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக