பக்கங்கள்

திங்கள், 15 அக்டோபர், 2007

சு.ரா. - சில குறிப்புகள்

2005 ஆம் வருடம், அக்டோபர் மாதம் 16ம் நாள் இந்து செய்தித்தாளில் சுந்தர ராமசாமி மரணம் என்ற செய்தியைப் பார்த்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. வேறு ஏதேனும் சுந்தர ராமசாமியாக இருக்கலாமோ என மனது ஒரு கணம் யோசித்தது. (இதை எழுதும்போது, ஒருமுறை, கமல் குமுதம் - தீராநதி செவ்வியில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் சு.ரா. என்று கூறினதைப் படித்த சு.ரா.வின் பக்கத்து வீட்டுக்காரர் நீங்கள் எழுத்தாளரா எனக்கேட்டதாக - அவருக்கேயுரிய எள்ளலுடன் சு.ரா. குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது.) மீண்டும் செய்தியைப் படித்து உறுதிசெய்து கொண்டபோதும் நம்புவதற்குச் சற்று கடினமாகவேயிருந்தது. பின்னர் பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, சு.ரா சிறிதுகாலமாகவே உடல் நலமின்மைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாகவும், மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாகவும் மிகுந்த சோகத்துடன் கூறினார்.

பத்து வருடங்களுக்கு முன்பு (1996 - 97), எனது தோழியின் தகப்பனார் திரு. நாராயணன் (எனக்கும் தந்தை போன்றவர்) காஞ்சிபுரத்தில் நடத்திவரும் இலக்கிய வட்டம் என்ற அமைப்பின் கூட்டமொன்றில் தற்செயலாகக் கலந்து கொண்டதின் மூலம், எனக்கு நவீனத் தமிழிலக்கியம் அறிமுகமாயிற்று. இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் அந்நிகழ்வு என் வாழ்க்கையின் மிக முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகத் தெரிகிறது; காரணம் அதுதான் எனக்கு தமிழ்ச் சிந்தனை மரபு, குறிப்பாக சிற்றிதழ் சார்ந்த, குறித்து வேறுபட்ட கண்ணோட்டத்தை அளிக்கக் காரணமாயிருந்தது. (அன்று அக்கூட்டத்தில் கலந்துகொள்ளாயிராவிட்டால், நான் தமிழ் வலைப்பதிவே ஒருவேளை ஆரம்பிக்காமல் இருந்திருக்கலாம் - நீங்களும் தப்பித்திருக்கலாம்) பிற்பாடு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று நடைபெற்றுக் கொண்டிருந்த அவ்விலக்கியக் கூட்டங்களில் நான் தவறாது கலந்துகொள்வதை வழமையாகக் கைக்கொள்ள ஆரம்பித்தேன். அங்கு புத்தக விற்பனையும் 20% தள்ளுபடி விலையில், அதுவும் பல தவணைகளில் திருப்பித்தரும் முறையில், வழங்கப்பட்டு வந்தது. நான் அப்புத்தகங்கள் விற்பதற்கான கல்லாவில் உட்கார்ந்துகொண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டும், அவ்வப்போது கூட்டம் நடப்பதைக் கவனித்துக் கொண்டுமிருப்பேன்.

அக்காலங்களில், நான் பார்த்தவரை, தமிழின் பெரும்பாலான வெகுசனப் பதிப்பகங்கள் வெளியிடும், ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகங்களை ஒப்பிடும்போது, படைப்பூக்கமற்ற புத்தகங்கள் - குறிப்பாக உள்ளடக்கம், மேலட்டை, உள்ளிருக்கும் தாள்கள், அச்சுக்கோர்வை முதலியவை, குறித்து எனக்கு நல்ல எண்ணங்கள் ஏதுமில்லை. ஆனால், அக்கூட்டங்களில் நான் காணக்கிடைத்த பெரும்பாலான பதிப்பக நூற்கள் - குறிப்பாக க்ரியா, காலச்சுவடு, தமிழினி - தமிழ்ப் புத்தகங்கள் குறித்த எனது பார்வையை மாற்றியமைத்தன. புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு ஏற்ப அதன் அட்டை, அச்சுக்கோர்வை முதலியனவும் படைப்பூக்கத்தோடு ‘செம்பதிப்பாக’ அமைந்து கவனத்தை ஈர்ப்பதாகயிருந்தன. (இப்போது சில வெகுசன பதிப்பகங்களும் செம்பதிப்புகளை வெளியிடுகின்றன - பெரும்பாலான புத்தகங்களில் சாரம் தான் இல்லை) அப்போதுதான், காலச்சுவடு வெளியீடாக வந்த ‘விரிவும் ஆழமும் தேடி’ என்ற சு.ரா.வின் கட்டுரைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அதற்கு முன்பு வரை சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளரைக் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. நவீன தமிழின் தீவிரமான எழுத்தாளர்களாக எனக்கு அதுவரை அறிமுகமாகியிருந்தவர்கள், பலருக்கும் போலவே, ஜெயகாந்தன், கி.ரா., பிரபஞ்சன், சுசாதா போன்றவர்கள் மட்டுமே. (புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி போன்றவர்களும் பள்ளியில் சொல்லித்தரப்படும்? தமிழ்த்துணைபாட நூலகள் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்தார்கள்)

விரிவும் ஆழமும் தேடி என்ற தலைப்பும், அதன் மேலட்டையில் கோட்டோவியமாகத்? தீட்டப்பட்டிருந்த ஒரு தாடிக்காரரின் முகமும், அதன் அச்சுக்கோர்வையும் என்னை அப்புத்தகத்தை வாசிக்கத் தூண்டியிருக்கலாம் என இப்போது தோன்றுகிறது. அப்புத்தகத்தின் அட்டைப்படத்திலிருப்பவர் சு. ரா. வாகயிருக்கலாம் என்பதனையும் அப்போதே ஊகித்தேன் என ஞாபகம்.



வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து, அதன் மாறுபட்ட தமிழ் உரைநடையால், என்னை அப்புத்தகம் சுண்டியிழுக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் சு.ரா. எழுதிய பிற புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். கட்டுரைகள் அளவிற்கு புனைகதைகளில் அதிக ஆர்வமில்லாத எனக்கு ‘ஒரு புளியமரத்தின் கதை’ மிகவும் சுவராசியமாக இருந்தது. சு. ரா. அதில் நாகர்கோவில் தமிழை, அவரது பெரும்பாலான புனைகதைகளைப் போல, வெகுவாகக் கையாண்டிருப்பார். நாகர்கோவில் எங்களுருக்கு (பணகுடி) அருகாமையில் உள்ளதால் அந்தத் தமிழை என்னால் இரசிக்க முடிந்தது. மேலும் அதில் கதையின் நாயகமாக வரும் புளியமரம், நாகர்கோவிலில் உண்மையிலேயே உள்ள (இன்றுமுள்ள) வேப்பமூடு (ஜங்ஷன்) என்பதையும் நான் அப்போது ஊகித்து உணர்ந்து கொண்டேன் என்றே எண்ணுகிறேன். ஒருமுறை நேரில் சு.ரா.விடம் இதுபற்றிக் கேட்டபோது அவரும் ஆமாம் என்றே சொன்னதாக ஞாபகம்.

தொடர்வேன்....

குறிப்பு: இன்று சு.ரா. இறந்த இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.

6 கருத்துகள்:

  1. என்னால் புளியமரத்தின் கதையில் ஒன்றிய அளவு,ஜே.ஜேவை ரசிக்க முடியவில்லை..மூன்று முறை படித்த பின்னும் ஆயாசமே மிஞ்சியது.காரணம் தெரியவில்லை.சு.ராவின் எழுத்துக்கள் நிச்சயம் போற்றப்பட வேண்டியவை.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ராதாகிருஷ்ணன், எனக்கும் அப்படித்தான். இரண்டாவது பகுதியில் இதுபற்றி எழுதலாமென்றுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. புளியமரத்தின் கதையில் இருந்து சு.ரா. குறித்த என்னுடைய புள்ளையார் சுழியை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். டவுசர் கிழிக்கும் எழுத்து நடையில் எழுதியிருப்பாரா? அல்லது புரிந்துகொள்ளும் அளவுக்கு இருக்குமா?

    பதிலளிநீக்கு
  4. பொதுவாக டவுசர் கிழியற மாதிரி எழுதியிருக்கமாட்டர், ஆனால் சில விதிவிலக்குகளும் உண்டு. புளியமரத்தின் கதையிலிருந்து தாராளமாக ஆரம்பிக்கலாம். எனக்கே அது பிடித்தது என்றால், உங்களை மாதிரி புனைகதை எழுத்தாளருக்குக் கண்டிப்பாய் பிடிக்கும். அதுசரி, எப்ப பிள்ளையார் சுழி எல்லாம் போடுமளவிற்கு ஆத்திகன் ஆனிங்க?!

    பதிலளிநீக்கு
  5. ஓ..! புளியமர ரகசியம் இதுதானா?

    சு. சமுத்திரம் என்று ஒரு எழுத்தாளர் இருந்தாரே தெரியுமா? அவர் "வாடாமல்லி" போன்ற அற்புதமான கதைகளை எழுதியிருக்கார் தெரியுமா? அதையும் தேடிகண்டுபிடிச்சு படிங்க.

    உங்க பார்வை இன்னும் விரியும்.

    பதிலளிநீக்கு
  6. I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

    பதிலளிநீக்கு