பக்கங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2010

சான்று சார்ந்த மருத்துவம் சாத்தியமா?!

பொதுவாக மருத்துவப் படிப்பை அறிவியலாகவும் மருத்துவத் தொழிலை கலையாகவும் சொல்வர் (Medicine is a Science to learn but Art to practice). இதன் பொருள் ஒரு மருத்துவன் தான் படித்ததையெல்லாம் நடைமுறையில் பயன்படுத்த முடியாது. வேறுவகையில் சொல்வதானால் வெறும் தருக்கம் மூலம் பெறப்பட்ட அறிவுடன் சற்று உணர்வுகளை கலந்து மருத்துவம் புரிபவனே சிறந்த மருத்துவன் என்பதாகும். ஏனெனில் மருத்துவ அறிவியலில் இன்னும் பல நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன. இயற்பியல், வேதியல் போன்று உயிரியலையும், மருத்துவத்தையும் கறாரான தருக்கம் மூலம் அணுக முடியாது.

ஆனால் இப்போதெல்லாம் சான்று சார்ந்த மருத்துவம் (Evidence based medicine) என்ற முறை மேலை நாடுகளில் அதிகம் புழக்கத்திற்கு வந்துகொண்டுள்ளது. இம்முறையில் புள்ளியியல் சான்றுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஏற்கனவே புள்ளியியல் முறைகள் மருத்துவ துறையில் அதிகம் பயன்பாட்டிலுள்ளது என்றாலும், இப்புதியமுறை மருத்துவம் புரிவதிலுள்ள கலையம்சத்தை அறவே நீக்கிவிட்டு அதில் புள்ளியியல் சான்றுகளை பதிலீடு செய்கிறது. புள்ளியியலும், அதன் உள்ளடங்கிய நிகழ்தகவு முறையும் நமக்கு பல விசயங்களை அறிவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதைமட்டுமே கொண்டு மருத்துவம் புரிவதால் சில நேரங்களில் மருத்துவர் செய்யும் தவறுகளை ஜெயமோகனின் இக்கட்டுரை உணர்த்துகிறது.

இதில் அவரது மகனுக்கு (கெட்டுப்போன) லஸ்ஸி சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு அழற்சிக்கு கொடுக்கப்பட்ட எதிர் மருந்துகள் மேலும் நோயைத் தீவிரப்படுத்தியதே தவிர குறைக்கவில்லை. தருக்க அறிவியல் முறை மூலம் சிந்தித்த மருத்துவர்கள் மேலும் மேலும் வேறு மருந்துகளை அளித்து எப்படியாவது நோயைக் கட்டுப்படுத்த முயன்றார்களே தவிர வேறுவிதமாக யோசிக்கவில்லை. அவர்களது தருக்க அறிவு அவர்களை அதைத்தாண்டி சிந்திக்க விடவில்லை. அம்மருத்துவர்களின் தந்தையோ ஒரு நாய் திருடன் போனபின்பும் குரைப்பதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டு ஒருவேளை இந்நோய் முறிவு மருந்துகளும் நோய்க்குக் காரணமான கிருமிகள் அழிந்தபின்பும் தொடந்து உடலைத் தூண்டுவதால் உடலானது எதிவினை புரிகிறது என்பதை குறிப்பால் உணர்ந்து அம்மருந்துகளை உடனடியாக நிறுத்தியதால் பின்னர் நோய் குனமானதாக எழுதியிருப்பார். இது மருத்துவம் செய்வதிலுள்ள கலையம்சத்தை (உள்ளுணர்வை) உணர்த்துகிறது. தருக்க அறிவியலின் நிகழ்தகவுக் கோட்பாடு இதனை ஒரு அரிதாக நடக்கும் நிகழ்வாக சொல்லும் (very rare probability), ஆயினும் எனக்கு தற்போதெல்லாம் உயிரியல் துறையில் தருக்க அறிவியலின் ஆதிக்கம் குறித்தது சற்று எதிர்மறை எண்ணம் தோன்றியுள்ளதால் இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் முன்பு எழுதிய சித்த மருத்துவமும் நவீன அறிவியலும் என்ற கட்டுரைத் தொகுதிகளில் ஒன்றில் சான்று சார்ந்த மருத்துவத்தை சற்று சிலாகித்து எழுதியிருப்பேன். இந்த இரு வருடங்களுக்குள் என்னில் இந்த மாற்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக