பக்கங்கள்

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

இன்று மகிழ்ச்சியான நாள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றைய நாளை மகிழ்ச்சியாக கழித்தேன் என்ற மனநிறைவுடன் தூங்கப்போகிறேன். அதனால்தான் நீண்ட நாட்கள் கழித்து இந்த இடுகை. காரணம், என் மனதிற்குப் பிடித்த இரண்டு விசயங்கள் இன்று நடந்தேறின.

முதாலாவது, என் நெருங்கிய நண்பர்கள் நடத்திய சித்த மருத்துவப் பயிலரங்கத்தில் கலந்துகொண்டது.  சித்த மருத்துவத்தின்பால் உண்மையான ஈடுபாடுகொண்ட என் நண்பர்கள் சிலர் சேர்ந்து தரு என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பயிலரங்கங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அப் பயிலரங்கங்களிற்கு துளிர் என்று பெயர் சூட்டியுள்ளனர். பொதுவாகவே இந்திய மருத்துவ முறைகளைக் கல்லூரிகளில் பயின்று வெளிவரும் மருத்துவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு உண்டு. இதற்கான காரணங்கள் பலவுண்டு. இவற்றைக் களையும்பொருட்டு இப்பயிலரஙக்ளை தொடர்ச்சியாக நடத்த நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர். இன்று நடந்தது இரண்டாவது துளிர் நிகழ்வு. இப்பயிலரங்களில் பத்தாண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பயின்று இன்று வெற்றிகரமாக சித்த மருத்துவம் மட்டும் செய்து நல்ல நிலையில் உள்ள சித்தமருத்துவ்ர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

இன்றைய நிகழ்வில் தெரிசனங்கோப்பு மகாதேவ ஐயர் மருத்துவமனை ஆயுர்வேத மருத்துவர், வைத்தியர். மகாதேவன் அவர்களும், என் நண்பர். மரு. ஸ்ரீராம் அவர்களும் தங்களது அனுபவஙகளைப் ப்கிர்ந்துகொண்டனர். மகாதேவனை சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவை விவசாயப் பல்கலையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் சந்தித்து பேசியிருக்கிறேன். இந்திய மருத்துவ முறைகளில், குறிப்பாக ஆயூர்வேதத்தில் அபாரமான திறைமையும், ஈடுபாடும் உள்ளவர். பரம்பரை வைத்திய ஞானம் அவரது மிகப்பெரிய பலம். இந்த ஆறு வருடங்களில் அவரது ஆற்றல் பல்மடங்கு பெருகியிருப்பதை உணர்ந்தேன். தொடச்சியாக பலமணி நேரம் உரையாற்றினார். சில சமயங்களில் வாரியார் சுவாமிகள் கதாகாலாட்சேபம் மாதிரி இருந்தது. நண்பர்கள் பலரை நீண்டவருடங்கள் கழித்து சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

இரண்டாவது விசயம் - சென்னை வந்த அன்னா ஹசாரேவை பார்த்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் ஹசாரே மாலையில் பேசினார். ஒரு எளிய மனிதரைப் பார்க்க பிரம்மாண்டமாக திரண்டிருந்த  மக்கள் திரள் மிக நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. நான் அங்கு செல்லும்போது மாலை 5.30 ஆகிவிட்டிருந்தது. கல்லூரிக்குள் நுழையும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிக்கொண்டிருந்தார்கள். ஒருவேளை ஹசாரே பேசி முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டாரோ என்ற சந்தேகத்துடனே உள் நுழைதேன். நல்ல வேளை அப்படியில்லை. மாலை 6.40 வரை கூட்டம் நடந்தது. ஹசாரே பேச்சை முன்னாள் நடிகர் கிட்டி மொழிபெயர்த்தார். பின்னர் கேள்விகளுக்கு ஹசாரேயும், கிரன் பேடியும் பதிலளித்தார்கள்.

பல்வேறு வகையான மக்களும் கலந்து காணப்பட்டனர். ஆயினும் கூட்டத்தில் மிக அதிகளவில் வடஇந்தியர்கள் காணப்பட்டனர். பெரும்பாலான தமிழர்களுக்கு இன்னும் ஹசாரே மேல் ஈர்ப்பு வரவில்லைபோல. கூட்டம் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தன்னார்வத் தொண்டர்களால் நல்லமுறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் முடிந்து ஹசாரே கிளம்பும்போது அவரை அருகில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது நானும் காந்தியைப் பார்த்துவிட்டேன் என்று முன்னர் நம் பாட்டையாக்கள் சொல்லி மகிழ்ந்த தருணங்களை நானும் உணர்ந்தது போன்ற பரவசம் ஏற்பட்டது.

கூட்டம் முடிந்து திரும்புகையில் ஜெயமோகனின் அன்னா ஹசாரே புத்தகம் கிழ்க்கு பதிப்பகத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. சுமாராக 200 புத்தகங்கள் இனறைய கூட்டத்தில் விற்றதாக மகிழ்ச்சியுடன் அங்கிருந்தவர் சொன்னார். நான் இன்று கோவை விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கவேண்டும். ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனால், என் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்குக் கிடைக்காத பாக்கியம் எனக்கு இன்று கிடைத்ததில் ஒரு சந்தோஷம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக