பக்கங்கள்

சனி, 14 ஜனவரி, 2012

உதிரி எண்ணங்கள்

நேற்று புத்தகக் காட்சியிலிருந்து வெளிவரும் போது சுண்டல் பொட்டலம் வாங்கிச் சாப்பிட்டேன். புற்றீசல்போல புத்தகக் காட்சி வாசலெங்கும் சுண்டல் விற்பவர் பலர் முளைத்திருந்தனர். கூடவே சோப்பு நுரையில் முட்டைவிடும் உபகரணங்கள்,  அமுதனின் மொழியில் பப்ளூஸ், விற்பவர்களும்.  சென்னை போன்ற பெருநகரங்களில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் இவர்களே கிராமியத் திருவிழாக்களுக்கான மனநிலையைக் கொண்டுவருகின்றனர். சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தீடிரென்று ஓரெண்ணம் - யாராவது என் துறையைச் சார்ந்த புண்ணியவான் இம்மாதிரி சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வினியோகிக்கப்படும் சுண்டல்களினால், சுண்டெலிகளால் அல்ல, தான் சென்னையில் பலருக்கும் பேதி நோய் எற்பட்டது என்று ”ஆராய்ந்து” சொல்லிவிடுவோனோ என்று பயம் ஏற்பட்டது. இப்பொதெல்லாம் எனக்கு என் துறை சார்ந்த ஆராய்ச்சி மேல் வெறுப்புதான் வருகிறது. ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவும் இயற்கையிலிலிருந்து நம்மை வெகுவாகப் பிரித்து வெறும் தொழில்நுட்பத்தையே மட்டும் நம்பி வாழும் அடிமைகளாக மாற்றுகிறதோ?!.

இன்று எங்கள் பகுதிக்கு யானை வந்தது. அமுதனை ஸ்கூட்டரில் வைத்து யானை பார்க்க அழைத்துப் போனேன். யானை பழக்க தோஷத்தில் தும்பிக்கை நீட்டியது. ஐந்து ரூபாய் கொடுத்து யானையிடம் இருவரும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டோம். அந்த கணப்பொழுதில் அடச் சே எவ்வளவு மகத்தான உயிரினம், நாமும் அதை பிச்சை எடுக்க வைக்க உறுதுணயாக இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வு பளிச்சிட்டது. ஆயினும் அமுதனின் சந்தோஷத்திற்காக இது தவறில்லெயென மனதிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டேன். அமுதனுக்கு தாங்க முடியாத சந்தோஷம். இரண்டுநாள் முன்புதான் அவனுக்கு புத்தகக் காட்சியிலிருந்து யானை புத்தகம் ஒன்று வாங்கிக்கொடுத்திருந்தோம்.

பின்னர் யானைக்கு பழம் வாங்கிக் கொடுக்கலாம் என அருகிலுள்ள கடைகளுக்குச் சென்றோம். எங்கும் பழம் கிடைக்கவில்லை. வாழைக் காய் தார்கள்தான் தொங்கின. வாழைகாய் கொடுத்தா யானை நம்மை அடிச்சிருமாப்பா எனக் கேட்டான், முன்பு சொல்லியிருந்த யானைக்கு தேங்காயில் ஊசி வைத்துக் கொடுத்த கதை ஞாபகம் வந்திருக்கும்போல. திரும்பி வரும்போது அப்பா யானை நமக்கு ஃபிரண்டாப் பா என்றான். ஆமா என்றேன்; அப்படின்னா அதுக்கு நம்ம ஆதவன்னு பேர் வைக்கலாம் என்றான். அப்பெயர் இரண்டு மாதங்களில் அடுத்து எங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகயிருந்தால் நாங்கள் வைக்க உத்தேசித்திருக்கும் பெயர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக