பக்கங்கள்

ஞாயிறு, 14 ஜூலை, 2013

அடையாற்றின் கரையில்...

சென்னையில் மணப்பாக்கம் பகுதி அடையாற்றின் கரையோரம் நடைப்பயணம் செல்ல வருமாறு நண்பர் சீனிவாசன் கூப்பிட்டார். இன்று காலை நானும், அமுதனும் சென்றோம். இங்கு புதிதாக குடியிருப்புகள் வந்துள்ளன. பெரும்பாலும் இந்திய ஆட்சிப்பணி, காவல் பணியில் பெரும்பொறுப்பில் உள்ளவர்கள் அதிகம் வசிக்கின்றனர். நாங்கள் வீடு கட்ட ஆரம்பிக்கும்போது இங்குள்ள வீடுகளை பார்வையிட வந்துள்ளேன். காலை கிளம்ப தாமதாகிவிட்டது. கிட்டத்தட்ட 8 மணிக்கு அடையாற்றை அடைந்தோம். ஸ்கூட்டைரை நிப்பாட்டிய இடத்தில் ஒரு பெரிய நத்தை ஊர்ந்துகொண்டிருந்தது. அப்பா, அது ரோட்டிற்குச் செல்கிறது. பைக் வந்தா செத்திடும், அதை எடுத்து இந்தப் பக்கம் விடு என்று அமுதம் சொன்னான். பரவாயில்லைடா,  போனா போகட்டும் எவ்வளவோ நத்தை ஊர்ந்து செல்லும், ஒவ்வொன்றையும் நம்மால் காப்பாத்த முடியாது என்றேன்.



சற்று நேரத்தில் சீனிவாசன் வந்தார். நடக்க ஆரம்பித்தோம். கரையை பலப்படுத்தி செம்மண் சாலை போட்டிருந்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு இங்கு வந்திருக்கிறேன். அப்போது இருபுறமும் உடை மரங்கள் வளர்ந்து மோசமான நிலையிலிருந்தது. பொதுப்பணித்துறை இப்போது செப்பனிட்டு இருமருங்கும் மரங்களை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரே மாதிரி இல்லாமல் பல்வகையான் மரங்கள் நட்டிருக்கிறார்கள். மூங்கில் மரங்கள் கூட பல நடப்பட்டிருக்கின்றன. இன்னும் சில வருடங்களில் இப்பகுதி பசுமையாக செழிப்பாய் மாறிவிடும். வழியில் துத்திப் பூ போன்ற பூக்கள் குத்துச் செடிகளில் பூத்துக் குலுங்கின. அப்பூக்களில் நிறைய வண்டுகள் தேன் குடித்துக் கொண்டிருந்தன. அமுதனுக்கு அவற்றின் அருகில் சென்றால் கொட்டிவிடுமோ என்ற பயம்.

தேன் குடிக்கும் வண்டு




ஆற்றில் கரிய வாத்து போன்ற நீண்ட கழுத்து கொண்ட சிறிய பறவைகள் நீந்திக்கொண்டிருந்தன. அமுதன் ஸ்வான் என்றான். ஸ்வான் இல்லடா ஏதோ வாத்து போன்ற பறவை என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவை சட்டென்று எழும்பி பறந்து அப்பால் சென்று மீண்டும் நீந்த ஆரம்பித்தன. ஏதோ பொம்மை பறவை பறப்பது போலிருப்பதாக சீனிவாசன் சொன்னார். சட்டென்று வானத்தில் கருமேகங்கள் போல் ஊஊ என்று சத்தத்துடன் வண்டுகள்/தேனீக்கள் அடையாற்றின் மறுகரையிலிருந்து எங்களைக் கடந்து பறந்து சென்றன. இவ்வளவு அடத்தியாக இப்பூச்சியினங்கள் பறப்பதை ஆச்சரியடத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம். மம்மி ரிட்டன்ஸ் படத்தில் வரும் காட்சி போலிருந்தது.
கரிய வாத்து போன்ற பறவைகள்

கொத்தாகப் பறக்கும் தேனீக்கள்


சற்று தூரம் சென்றதும் மேலும் இரண்டு நண்பர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். வேழவனம் சுரேஷ் பாபுவும், சுவாமிநாதனும் எதிரில் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களும் மதனந்தபுரத்தில்தான் இருக்கிறார்களாம். அடையாற்றின் இந்தப்பகுதி ராணுவ அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரி இடத்தை ஊடறுத்துச் செல்கிறது. உண்மையில் அடையாற்றின் கரை மட்டுமே தமிழக பொத்துப்பணித்துறைக்குச் சொந்தம். ஆற்றின் இரு மருங்கும் ராணுவ அதிகார்களின் பயிற்சி மைதானமும், அலுவலகம், குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. ஆற்றைக் கடந்து செல்ல ஒரு இருப்புப் பாலம் அமைத்துள்ளார்கள். அமுதனுக்கு அதன் மேல் நடந்து செல்ல ஆசை. தயக்கத்துடனேயே சென்றோம். அதற்குள் இருவர் இங்கு சிவிலியன்களுக்கு அனுமதியில்லை என்று சொல்லி எங்களைப் போகச் சொல்லிவிட்டார்கள். உண்மையில் ராணுவத்தின் கையிலிருப்பதால் மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பல்லாவரம் பகுதிகளை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர் இன்னும் காங்கீரீட் காடாக மாறாமல் உள்ளது. அடையாறு முகத்துவாரமும் ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்திருக்கும்.




சங்குப் பூ கொடி புடுங்குகிறார்கள்


மேலும் தொடர்ந்து நடந்தோம். இரும்புப் பாலத்தை அடுத்த அடையாற்றின் கரையில் இப்போது வேம்ப மரங்கள் மட்டுமே இருந்தன. இப்பகுதி சற்று முன்னரே செம்மைப்படுத்த பட்டிருக்கவேண்டும். மரங்கள் ஐந்தாறு வருட வயதானவையாக இருந்தன. முன்பகுதியில் உள்ள வெவ்வேறு வகையான மரங்கள் சென்ற இரண்டு மாதங்களில் நடப்பட்டவை. கரைகளில் ஊதா வண்ண சங்குப் பூக்கள் பூத்திருந்தன. விதைகள் இன்னும் முற்றியிருக்கவில்லை. ஆகையினால் அடுத்தமுறை வரும்போது விதகைளைச் சேகரிக்கலாம் என நினைத்தேன். சுரேஷ் ஒரு கொடியை வேரோடு புடுங்கிக் கொடுத்தார். சற்றுதூரம் நடந்ததும் விமான நிலையத்தின் சுற்றுச் சுவர் வந்துவிட்டது. நாங்கள் சென்ற பாதையிலேயே இன்னும் சென்றால் கொளப்பாக்கம் கிராமம் வந்துவிடும், உங்கள் ஸ்கூல் வந்துவிடும் என்று அமுதனிடம் சொன்னேன். போகலாம்பா என்றான். ஆனால் இப்போது அதுமுடியாது. ஏனெனில், இரண்டாவது ஓடுபாதையை நீட்டிப்பதற்காக அடையாற்றின் குறுக்கே பாலம் கட்டிவிட்டதால் இன்னும் சிறிது தூரத்தில் விமான நிலைய சுற்றுச்சுவர் தடுத்துவிடும். உண்மையில் எங்கள் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் விமான நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட இரண்டாவது ஓடுபாதை வந்துவிடும்.

வழியில் ஒரு பண்ணை வீட்டைப் பார்த்தோம். பாழடைந்து கிடந்தது. அப்பண்னையின் வேலிகளில் ரங்கூன் கொடிகள் படர்ந்து பூத்திருந்தன. நீண்ட நாட்களாக ஒரு ரங்கூன் கொடியை எங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். கொடிகளைப் பிடுங்க அவை முடிவிலா வேர்களைக் கொண்டு அப்பகுதியையே நிறைத்திருந்தன. சில கொடிகளைப் பிடுங்கிக் கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தோம். வழியில் மேலும் சங்குப் பூ கொடிகளை அமுதன் எடுத்துக்கொண்டான். 10 மணிக்கு ஸ்கூட்டர் நிறுத்துமிடத்திற்கு வந்தோம். நத்தையை ஏதோவாகனம் ஏற்றி கூழாக்கியிருந்தது. உங்கிட்ட அப்பவே சொன்னேன்ல, அதை நீதான் காப்பாத்தாம விட்டுட்ட என்று அமுதன் என்னைக் கடிந்தான். வீட்டிற்கு வந்து முதல் வேலையாக செடிகளை மண்ணில் ஊன்றி நீர்விட்டோம்.


ஆங்கில ஹிண்டு பத்திரிக்கையில் 2019-ல் வந்த கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக