பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2013

நவ காந்தியர் - பி.வி. ராஜகோபாலலுடன் கலந்துரையாடல்

சென்ற செவ்வாயன்று ஏக்தா பரிஷத்தின் நிறுவனத் தலைவரான பி.வி ராஜகோபாலுடன் கலந்துரையாடல் ஒன்றை  நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவர் அண்ணா ஹசாரேயின் முதன்மைக் குழுவில் இருந்தவர். பின்னர் விலகிவிட்டார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கடந்த பல ஆண்டுகளாக ஆதிவாசிகள், தலித்துக்கள், நிலமற்ற ஏழைகள், கொத்தடிமைகள் போன்றவர்களின் உரிமைகளுக்காக அகிம்சை முறையில் போரட்டங்களை நடத்தி வருகிறார்.



குறைவான நபர்களே வந்திருந்ததனால் ஒருவரையொருவர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகு உரையாடல் தொடங்கியது. ராஜகோபால் எழுபதுகளில் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை காந்தியடிகளின் புகைப்படத்தின் முன் ஆயுதங்களை ஒப்படைக்க வைத்து பொதுச் சமூகத்திற்கு திருப்பியதின் மூலம் தனது பொதுவாழ்க்கை ஆரம்பமானதாக சொன்னார். ஆதிவாசிகள், நிலமற்ற ஏழைகள், தலித்துக்கள்  வசிக்கும் நிலவளங்களின் பயன்பாடு அவர்களது கையிலேயே இருக்கவேண்டும்; வளர்ச்சி என்ற பெயரில் அவர்களை அரசு சுரண்ட அனுமதிக்கக் கூடாது. அப்படி நடக்கும் போது வன்முறைக்குப் பதில் அறவழி மூலமே போராடவேண்டும் என்ற இரண்டு அடிப்படைக் கொள்கைகளின் மேலேயே தனது இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் ஏக்தா பரிஷத் சென்ற ஆண்டு 50,000 நபர்களுடன் குவாலியரிலிருந்து டெல்லி நோக்கி  நடத்திய ஜன் சத்யாகிரகா  பற்றி சொன்னார். இத்தகைய பிரம்மாண்டமான சத்தியாகிரகப் போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்திய அனுபவங்கள் சிலவற்றைக் குறித்துப் பேசினார். இப்போராட்டம் ஒருவகையில் வெற்றி. நடுவணரசு இறுதியில் இறங்கி வந்து தேசிய நிலச் சீர்திருத்த சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர சம்மத்திருக்கிறது. இதற்கு அவருக்கு 20 வருடங்கள் ஆகியிருக்கிறது. கடந்த 20 வருடங்களாக சிறிய அளவில் இதுபோன்ற போராட்டங்களை நடத்தி இன்று இவ்வெற்றியை ஈட்டியிருக்கிறார். ஒவ்வொரு ஆதிவாசிக் குடும்பமும் தினம் ஒருபடி அரிசி, ஒரு ரூபாய் சேமிப்பு என்று 3 வருடங்களாக இப்போராட்டத்திற்கு தங்களை தயார்படுத்தி வந்துள்ளார்கள். ஏனெனில் குவாலியரிலிருந்து டெல்லி வரையிலான தூரத்தைக் கடக்க ஆகும் ஒரு மாத கால அளவிற்குத் தேவையான உணவு, கைச்செலவுக்கு இந்த சேமிப்பு தேவைப்படும். மேலும் பல இளைஞர்களை பயிற்றுவித்து கூட்டத்தை பகுதி பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் பல பயிற்சிபெற்ற இளைஞர்கள் பொறுப்பாளர்களாக நியமித்து வழிநடத்தியுள்ளார். இல்லையெனில் இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டத்தில் வன்முறையை எளிதாக தூண்டிவிடலாம் அல்லவா. (கருணாநிதி கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் அயோத்தியாகுப்பம் வீரமணி வகையாறா தூண்டிய வன்முறை நினைவிற்கு வருகிறது) வன்முறையை அரசு எளிதாகக் கையாண்டுவிடும், வன்முறையின்மையை அதனால் கையாளமுடியாது என்றார். ஆகவே கோபக்கார இளைஞர்களை பயிற்றுவித்து இம்மாதிரி ஆக்கபூர்வமான காரியங்களில் அவர்களை ஈடுபடுத்துவது தனக்குப் பிடிக்கும் என ராஜகோபால் சொன்னார்.

அவரது உரையாடலின் மையம் முழுவதுமே ஆதிவாசிகள், தலித்துக்கள், நிலமற்ற ஏழைகள், கொத்தடிமைகள் ஆகியவர்களை மையப்படுத்தியே இருந்தது. ஜன் சத்யாகிரகா பற்றி சொல்லும்போதே இத்தகைய போராட்டங்களை இம்மக்களால் மட்டுமே முன்னெடுக்கமுடியும் என்றார். நடுத்தரவர்க்க மக்கள் சாலையில் படுத்துறங்க முன்வரமாட்டார்கள்; இரவானதும் வீடு திரும்பிவிடுவார்கள். அதனால் அவர்களை வைத்துக்கொண்டு இத்தகைய போராட்டங்களை நடத்த முடியாது என்றார். ஆனால் அவர்கள் வேறுவகையில் உதவலாம்; கால்பந்தாட்ட அணியில் இறுதியில் கோலடிப்பவர் ஒருவரானாலும், பந்தை அத்தனை தூரம் கடத்தியதில் பலரது பங்களிப்பும் இருப்பதுபோல என்றார். ஆகவே நடுத்தரவர்க்க மக்கள் பிரதமருக்கு மின் அஞ்சல் அனுப்பலாம், இணையத்தில் இப்போராட்டம் குறித்து எழுதுவதன் மூலம் போராட்டத்திற்கு உதவலாம் எனச் சொன்னார்.

உரையாடலின் நடுவில் இன்றைய கல்வி குறித்து இயல்பாகவே அவரது கவனம் திரும்பியது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலிருந்து நன்கு படித்துப் பட்டம் பெற்ற திடகாத்திரமான இளைஞர்களை மாதம் 20 ஆயிரம்,  ஒரு பைக், செல் பேசி என்று சம்பளம் பேசி இந்திய, சர்வதேசிய நிறுவனங்கள் வேலைக்கு வைத்துக்கொள்கிறார்கள். இவ்விளைஞர்களின் முதன்மையான பணி என்பது ஆதிவாசிகளை அவர்களது பூர்வீக நிலத்திலிருந்து பகிரங்கமாக அப்புறப்படுத்த வேண்டுமென்பதே எனச் சொன்னார். இவ்விளைஞர்கள் எளியவர்களான ஆதிவாசிகளை அடிப்பது குறித்தோ, கொல்வது குறித்தோ குற்றவுணர்வு கொள்வதில்லை. அவர்களுக்குத் தேவை மாதமானால் கை நிறையச் சம்பளம். இன்றைய கல்விமுறையின் பயன் இது எனச் சொன்னார். இன்றைய கல்வி முறையின் பயனாக ஒருவருக்கு சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் பொருளாதாரம் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால் தனது சொந்த கிராமத்தின் பொருளாதாரம் குறித்து கைப்பிடியளவு கூடத் தெரியாது என்றார். கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க அமெரிக்க அரசாங்கம் கோடிக்கணக்கான டாலர் செலவிடுகிறது. நம்நாட்டில் இத்தகைய காட்டுத் தீ ஏற்படுவதில்லை. முதன்மையான காரணம் என்னவெனில் ஆதிவாசிகளுக்கு காட்டுத்தீயை எப்படிக் கையாள வேண்டும் எனத் தெரியும் என்றார். ஆனால் நம்முடைய அரசு அவர்களை வலுக்கட்டாயமாக காடுகளிலிருந்து விரட்டிவிட்டு முசெளரியில் படித்து பட்டம் பெற்ற காட்டிலாகா அதிகாரிகளை நியமிக்கிறது.

ஆதிவாசிகளுக்கு கல்வியளித்து பொதுச் சமூகத்திற்கு கொண்டுவருவது குறித்து அவரது கருத்து என்ன என நண்பர் ஒருவர் கேட்டார். சிலர் தற்போதைய கல்விமுறையை திறன்மிக்கதாக மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர்; இது திறன்மிக்கதாக இல்லை என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியது என்றார். அவர் கூறியது, உள்ளூருக்குப் பயனளிக்கக் கூடிய கல்விமுறை வேண்டும் என்பதே. உதாரணமாக வனவாசிகளுக்கு பயிற்சியளித்து அவர்களையே காட்டிலாகா அதிகாரிகளாக நியமித்தால் பிரச்சனைகளைக் குறைக்கலாம் என்பதே. மாற்றாக காட்டைப் பற்றி புத்தகத்தில் மட்டுமே படித்த ஒருவர் அதிகாரியாக வருவதால்தான் உண்மையான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக சொன்னதாக என் நினைவில் பதிந்திருக்கிறது. ஆனால் அவ்வாறு கல்வி பெற்று ‘முன்னேறிவர்களும்’ பிற் நகரவாசிகளைப் போலவே செயல்படத் தொடங்கிவிடுகிறார்கள் என்றும் சொன்னார். உதாரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேசத்திலிருந்து தமிழகக் கொத்தடிமைகள் சிலரை மீட்க அவர் முயன்றபோது, படித்து முன்னேறிய வட இந்திய தலித்தொருவர் அதை ஊதாசீனப்படுத்தினார் என்றார். மேற்கொண்டும் சில உரையாடலகள் நடந்தன. அவைகள் என் நினைவடுக்கிலிருந்து தப்பிவிட்டன. மதியம் நேரமாகிவிட்டபடியால் 12.45 மணிக்கு கலந்துரையாடலை முடித்துக்கொண்டோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக